அரியாசனம் உனக்கே யானால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே!
உலகச் செம்மொழிகளுள் உயிர்ப்புடன் திகழுகின்ற செந்தமிழ். கீழடி ஆய்வு வழி உலக மொழி வரலாற்றில் மேலடி எடுத்து வைத்தப் பைந்தமிழ். உலகத் தோற்றத்தோடு ஒப்ப வைத்து எண்ணத்தக்க செழுந்தமிழ். பழம்பெருமையும் புதுப்பொலிவும் ஒருங்கே பெற்ற தாய்த்தமிழ் மொழியை, உயர் கல்வியாகக் கற்பிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது பெருமைமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை.
திருச்சிராப்பள்ளியின் முதல் கல்லூரியாக கி.பி.1882 முதல் 1934 வரை எஸ்.பி.ஜி. கல்லூரி (நற்செய்தி பரவல் கழகம், Society for the Propagation of the Gospel) எனும் பெயரில் அமைந்த முதற்கால கட்டத்திற்குப் பிறகு 1966 - ஆம் ஆண்டு பிஷப் ஹீபர் கல்லூரி மீண்டும் புத்துயிர்ப்புப் பெற்றது.
1981 - ஆம் ஆண்டு தமிழ்மாமணி முனைவர் ப.ச.ஏசுதாசன் அவர்களின் தலைமையில் முதுகலைத் தமிழாய்வுத்துறை தொடங்கப்பெற்றது. 1984 - இல் பகுதிநேர ஆய்வியல் நிறைஞர் படிப்பும், 1985 - இல் முழுநேர ஆய்வியல் நிறைஞர் படிப்பும் தொடங்கப் பெற்றன.1985, 1986 - ஆம் ஆண்டுகளில் முறையே பகுதிநேர, முழுநேர முனைவர்பட்ட ஆய்வுப் படிப்புகளும், 2018 - ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ்ப்படிப்பும் தொடங்கப் பெற்றன. தமிழாய்வுத் துறையிலிருந்து நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட மாணவர்களும், அறுநூறுக்கும் மேற்பட்ட ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களும் உருவாகியுள்ளனர். இத்தகைய வளர்ச்சிக்கு மேனாள் துறைத்தலைவர்கள் அரும்பணியாற்றியுள்ளனர்.
மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்கள் எமது தமிழாய்வுத்துறையின் மேனாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஷப் கால்டுவெல் புத்தக நிலையம், சீகன்பால்க் பதிப்பகம் என்பன தமிழாய்வுத்துறைக்குப் பெருமை சேர்ப்பன.
தொடர் நிகழ்வுகள்